Saturday, May 28, 2016

பயணங்கள் முடிவதில்லை : முனைவர் சௌந்தர மகாதேவன்





                  பலப்படுத்தும் பயணங்கள்

முனைவர் சௌந்தர மகாதேவன்,தமிழ்த்துறைத்தலைவர்
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,திருநெல்வேலி,9952140275

பயணமெனும் நகர்வுத் தியானம்
 
உங்கள் குடும்பத்தாரோடு சுற்றுலா சென்ற நிமிடங்களை நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? எப்போதும் குறைவாகப் பேசும் உங்கள் மகன் உங்களுக்கு வெகுநெருக்கமாகியிருப்பான். இரண்டடி தூரத்தில் நின்று பேசுகிற உங்கள் மகள் உங்களுக்கு நெருக்கமாகியிருப்பாள். எப்போதும் உங்கள் குறைகளையே பிரகடனப்படுத்தும் உங்கள் அலவலக நண்பரோடு சுற்றுலா சென்றதுண்டா? சென்றிருந்தால் நீங்களும் அவரும் விசாலமாயிருப்பீர்கள். தூரங்களைத் துரத்தும் நேரங்களைச் சுற்றுலா நமக்குச் சத்தமில்லாமல் தந்துசெல்கிறது. பிணக்கை விடுத்துப் பிணைப்பையும் ஓர் இணைப்பையும் சுற்றுலா  உருவாக்குகிறது. பிளவுபட்ட மனங்களை நெருக்கிநிறுத்துகிறது. ஓட்டத்தையும் முக வாட்டத்தையும் தடுத்து இறுக்கத்தை நிறுத்தி நெருக்கத்தை உருவாக்குகிறது. பண்பாட்டை நமக்குக் கற்றுத்தருகிறது. நல்ல பழக்கவழக்கங்களை நமக்குக் கற்றுத்தருகிறது. வியப்பின் விரிபரப்பில் அப்பயணங்கள் நம்மை நகர்த்திவைக்கிறது.

பயணமெனும் நகர்வுத் தியானம்

பயணம் ஓர் நகர்வுத் தியானம். பயணப்படும்போது நாம் பக்குவம் அடைகிறோம். பயணம், பாதங்களால் நடக்கும் பக்குவத் தியானம். பயணப் பொழுதுகளில் நீங்கள் பக்குவமாகியிருப்பீர்கள். பயணப்பொழுதுகளில் உங்கள் விலாக்களில் விருட்டென்று சிறகுகள் முளைத்திருக்கும். பயணப்பொழுதுகளில் உங்கள் சிக்கல்களுக்கும் விக்கல் எடுத்திருக்கும்.பயணப்பொழுதுகளில் நீங்கள் இயற்கையின் இதயத்தில் இருந்திருப்பீர்கள். தீட்டத்தீட்ட ஒளிர்கிற வைரங்கள் மாதிரி நடக்கநடக்க நீங்கள் காலத்தையும் கடந்திருப்பீர்கள். வெறுமையிலும் பொறுமையைக் கற்றிருப்பீர்கள், சகிப்புத்தன்மை உங்கள் வாழ்விலும் சாத்தியமாயிருக்கும். அலுவல் அழைப்பில்லா அந்த அருமைப் பொழுதுகளில், செல்பேசிகள் செவிகளை வருத்தாத அந்த அமைதிப் பொழுதுகளில் வினாடிகளில்  சிந்தையை நிறைத்திடும் விந்தை நிகழ்வதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். நாம் கடிகாரம் கட்டிக்கொண்டுள்ளோமோ? நம்மைக் கடிகாரம் கட்டிக்கொண்டிருக்கிறதோ! என்று சந்தேகப்படும்படியாக வாழ்வின் முதல்பாதியில் டென்ஷனுக்கும் அடுத்தபாதியில் பென்ஷனுக்கும் தன்னைக் கொடுத்துவாழும் மனிதர்களை  பயணப்பொழுதுகள் பழுதுபார்க்கின்றன. பூமியின் பிரம்மாண்டத்தை நீங்கள் புரிந்திருப்பீர்கள். நீங்கள் வசிக்கும் மண்ணின் மகத்துவத்தை உங்கள் மனம் கண்டு மலைத்திருக்கும். 

சுற்றிக்கொண்டேயிருப்பதே சுகம் 

ஆம்! பயணம் அற்புதமானது. சோகத்தைத் தூக்கி எறிந்த சுகவினாடிகளை நாம் ஏன் சுகிக்க மறந்துவிட்டோம். யாரையாவது நீங்கள் துல்லியமாகப் புரிந்துகொள்ள விரும்பினால் அவரோடு இரண்டுநாட்களாவது பயணப்படுங்கள்,அவர் அந்தராத்மாவைக் கூட நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளமுடியும். 

தோன்றிய வினாடியிலிருந்து சுற்றிக்கொண்டே இருக்கும் பூமிமாதிரி இடையறாது சுற்றிக்கொண்டேயிருப்பதன் சுகம் தனியானது. அதனால்தான் காசியில் வசிப்பவனுக்கு ராமேஸ்வரமும் காஞ்சியில் வசிப்பவனுக்கு ரிஷிகேசும் புனிததலங்களாய் முன்னிறுத்தப்பட்டது.

புத்தரின் புரிதல் 

நேபாளத்தின் லும்பினியில் பிறந்த சித்தார்த்த கௌதமர் சுகபோக வாழ்வைவிட்டு அரண்மனையைவிட்டுத் தேசாந்திரியாகப் பலபகுதிகள் அலைந்து திரிந்து கயை எனும் இடத்தில் போதிமரத்தடியில் ஞானம் பெற்றுப் புத்தராக மாறினார். கபிலவஸ்துவிலிருந்து கிளம்பிய புத்தர் நடந்தே இந்தியாவெங்கும் பயணத்திருக்கிறார். மனித தரிசனத்திற்கு அவரது பயணஅனுபவங்களே பெருந்துணை புரிந்தன. வழிநெடுகிலும் அவர் இயற்கையைக் கண்டு பேருவகை கொண்டார். உயிரினங்களையும் பயிரினங்களையும் ரசித்தபடி பயணித்தார்.

பலம்தந்த பயணங்கள்

கல்கத்தா நகரில் பிறந்த சுவாமி விவேகானந்தர் மிகுந்த சிரமத்திற்கிடையே சிகாகோ மாநகருக்கு மேற்கொண்ட பயணம் இந்தியப் பண்பாட்டை உலகுக்கு உணரவைத்தது. இமயம் முதல் குமரிவரை அவர் கடந்தபாதைகள் அவருக்கு இந்தியா குறித்த விசாலமான பார்வைக்குக் காரணமாய் அமைந்தன. அவருக்குத் தென்னிந்தியா மிகவும் பிடித்தபகுதியாய் இருந்தது.

பாரிஸ்டர் பட்டம் பெற்ற புகழ்மிக்க வழக்கறிஞராய் வழக்குநடத்தத் தென்னாப்ரிக்கா மேற்கொண்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் தென்னாப்ரிக்கப் பயணம் இந்தியவிடுதலைப் போராட்டத்திற்கு அவரை அழைத்துவந்தது.

மகாகவி பாரதியின் பயணங்கள் தமிழக மக்களுக்கு எழுச்சியையும் உற்சாகத்தையும் தந்தன. எட்டயபுரத்தில் பிறந்து திருநெல்வேலியில் கல்விகற்று காசிசென்று உயர்கல்வி முடித்து பலமொழிகள் கற்று சென்னையிலும் புதுவையிலும் கடையத்திலும் வாழ்ந்து இயற்கையை ரசித்து “ நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?” என்று கேட்கக் காரணமாய் அமைந்த பயணங்களை எப்படிப் புகழ்வது?

உலகைச் சுற்றிய பயணிகள் 

போர்ச்சுக்கீசிய நாடுகாண் பயணியாகக் கிளம்பிய வாஸ்கோடகாமா, ஆப்ரிக்காக் கண்டத்திலிருந்து 23 நாட்கள் இந்தியப்பெருங்கடலில் பயணித்து இந்தியாவின் மலபார் கடற்கரைப் பகுதியை அடைந்தார்.
 கிறிஸ்டோபர் கொலம்பசின் பயணத்தால் அமெரிக்கநாடு உலகின் பார்வைக்கு வந்தது. சீனப்பயணியான யுவான்சுவாங், கைபர் கணவாய் மூலமாக இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் அற்புதமானது. பதினாறு ஆண்டுகள் இந்தியாவில் தங்கி இந்தியாவின் தொன்மையை ஆராய்ந்தார். காஷ்மீர், பாடலிபுத்திரம் போன்ற பகுதிகளுக்குப் பயணித்து புத்தசமயம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டார். நாளந்தா பல்கலைக்கழகத்தில் தங்கிப் பயின்றுள்ளார். சமஸ்கிருதத்தில் இருந்த புத்தசமயநூல்களைக் கற்றுணர்ந்து சீனமொழியில் மொழிபெயர்ப்பது அவர் பயணத்தால் நிகழ்ந்த நிகழ்வு.

பயணித்த கடல் பார்த்த கண்கள், நதியில் கால்நனைக்கும் கால்கள், அருவியில் நனையும் அழகுத்தலைகள், தேயிலைத் தோட்டத்தில் நுரையீரல் நிறைக்கும் வெகுசுத்தமான ஆக்சிஜன் காற்று, பயணத்தடங்களில் கிடைக்கும் சூடானதேநீர், இடைப்படும் இனிய தேசாந்திரிகள், மாசுமருவற்ற அற்புதமான ரயில்சிநேகம் எல்லாம் கிடைத்து எவ்வளவு நாட்களாயிற்று? 

இன்னும் திருமலை நாயக்கர் மகால் பார்க்காத திருவாளர்கள் எத்தனைப் பேர்? தேக்கடிகூடப் பார்க்காமல் கொசுக்கடியில் தவிப்போர் எத்தனைப்பேர்”? மதுரை ஈர்ப்பில் அழகர்கூட ஆண்டுக்கொருமுறை அழகர்கோயிலை விட்டுக் கிளம்பிவந்துவிடுகிறார். ஆனால் இல்லம் விட்டு நகராமல் இன்னும் நாம்! 

நிம்மதி தரும் பயணங்கள்

ஓடும் நீர்தானே நதியாகும், இயங்காமல் இருக்கிறஇடத்தில் இருப்பது சதியாகும். குதிரைப் பந்தயத்தில் உள்ள குதிரைகளைப்போல் ஓடிக்களைக்கும் போது வலுகுறைந்ததாய் வாழ்க்கை நம்மை வாசலில்கொண்டு நிறுத்துகிறது. வாழ்வின் வசந்தத்தை ரசிக்க நாம் வெளிநாடுகளுக்குதான் விமானத்தில் பறக்கவேண்டும் என்பதில்லை. மெட்ரோ ரயில்பயணம் கூட மெட்டுப்போட்ட பாட்டு நம்மைக் கட்டிப்போடுகிற மாதிரி இனிமையானதுதான். பயணப்பொழுதுகளில் பஞ்சுபோல் நெஞ்சு மாறுகிறது. 

சோகம் தொட்டுச் சென்றே பழக்கப்பட்ட நமக்கு மேகம்தொடும் அனுபவம் தரும் ஊட்டியும் கொடைக்கானலும் நம் பர்சுக்கு இதமான பக்கத்தில்தான் இன்னும் இருக்கிறது. பேருந்துப்பயணம் எத்தனை அற்புதமானது சன்னலைத் தாண்டி நம் மீது சில்லென்று வீசும் பூங்காற்று, நாற்கரச்சாலையின் நடுவே அழகாகப் பூத்திருக்கும் அரளிச்செடிகள், இருபுறமும் பின்னால் ஓடும் மரங்கள் யாவும் அழகியல் காட்சிகள்.
ரயில்பயணம் இன்னும் அழகு. நம் வீடுபோல் நடக்கவும், நிம்மதியாய் தூங்கவும் எந்த அலுப்பில்லாமல் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் கடந்து பலமாநிலங்களைப் பார்த்துரசிக்கவும் வாய்ப்பளிக்கவும் உதவும் ரயில்பயணம் பல நண்பர்களை நமக்குத் தந்திருக்கிறதே. 

கேரளக்கடற்கரையின் படகுப்பயணம், கன்னியாகுமரிக் கடலில் ஸ்டீமர் பயணம், கிராமத்தில் கட்டைவண்டிப் பயணம், உடல்நலத்திற்கு உதவும் சைக்கிள்பயணம், சிறுதெருக்களில் நுழைந்து வெளிவரும் ஆட்டோப் பயணம், பஞ்சுப்பொதிகளுக்குள் நுழைந்ததுபோல் ஆகாயத்தைக் கிழித்தபடி விரிவானில் பலநாடுகளைக் கடக்கும் இனிமையான விமானப்பயணம் ..என்று விதவிதமாய் அவரவர் வசிதிக்கு ஏற்றபடி இனிமையான பயணங்கள். 

நாமும் பயணிப்போம்

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா! என்று நன்றி சொல்லி இந்தக் கோடைவிடுமுறைக்கு நம் பொருளாதாரத்திற்கு ஏற்ற ஏதேனும் ஓரிடத்திற்காவது நம் குழந்தைகளை அழைத்துச் செல்வோம். சலவை செய்த பளிங்கு மொட்டாய் திகழும் தாஜ்மகால், அழகான அரண்மனைகளை அதே பழைமையோடு வைத்திருக்கும் ஜெய்ப்பூர் மாநகரம், இயற்கையின் தொட்டிலாகத் திகழும் கேரளமலைப் பகுதிகள், அழகான ராமேஸ்வரத்தீவு, பாபநாசம் அருவி, மாஞ்சோலை, மூணார், வால்பாறைத் தேயிலைத் தோட்டங்கள், கம்பம் குமுளி இயற்கை அழகுகள், மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவில், திருமலைநாயக்கர் மகால், கோடையிலும் குளிரவைக்கும் கொடைக்கானல், ஊட்டி  ஒன்றை ஒன்று முந்திச் செல்லும் அசுரவேக வாகனங்கள் அழகர்கோயில் பனிச்சுனைத் தேன்நீர், சாத்தூர் வெள்ளரிக்காய், கோவில்பட்டி கடலைமிட்டாய், திருநெல்வேலி அல்வா,மதுரை மல்லி, கொடை ரோடு பழங்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, மணப்பாறை முறுக்கு, திருச்செந்தூர் சில்லுக்கருப்பட்டி,கடம்பூர் போளி இவற்றையெல்லாம் பெறுவதற்காக நாமும் பயணிப்போம்.

Friday, September 18, 2015

என் பார்வை தன்னம்பிக்கைக் கட்டுரைகள் : முனைவர் சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி


எழுத்து சுகமான பேரானந்தம்.எழுதியதை வாசகர்கள் சரியாகப் புரிந்துகொண்டு கொண்டாடத் தொடங்கும்போது அடுத்த பக்கம் எழுதுவதற்கான ஊக்கம் பிறக்கிறது.

நான் தினமலரில் எழுதத்தொடங்கி ஓராண்டாகிவிட்டது. 

இந்த ஓராண்டில் என்னை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டுசென்ற அற்புதமான நாட்களை நினைத்துப் பார்த்தால் மனம் மகிழ்வடைகிறது. கல்லூரிவிழா ஒன்றை முடித்துவிட்டு துறையில் இருந்தேன். 


செல்பேசி ஒலித்தது..நான் மதுரை தினமலர் ஆசிரியர் ரமேஷ்குமார் பேசுகிறேன்..என்றவர் என் முகநூல் பதிவுகளைப் பற்றியும் அப்போது வெளியாகியிருந்த வானொலியின் வசந்தகாலம் கட்டுரை குறித்தும் மிகநுட்பமாகப் பேசினார். 

.காலை ஆறுமணிகெல்லாம் அனைத்து நாளிதழ்களையும் வாசித்துவிட்டு முனைவர் ராமசுப்பு அவர்களுடன் அடுத்த நாள் கட்டுரைகள் நேர்காணல்களை எடுப்பது குறித்துத் திட்டமிடுபவர் என அறிந்திருந்தேன்.

 யார் எந்த இதழில் என்ன நல்ல விஷயம் எழுதினாலும் எந்தப் பேதமும் இல்லாமல் உடன் பாராட்டும் இயல்புடையவர் என்று கேள்விப்பட்டேன். என் பார்வை குறித்து விளக்கினார். நீங்கள் என் பார்வைக்கு எழுதலாமே என்று அன்புடன் வேண்டினார். நான் மதுரை தினமலர் எங்கள் நெல்லைக்கு வராது என்று சொன்னேன். 

ஈ பேப்பரில் வருகிறதே என்று சொன்னார். வாசிக்கத் தொடங்கினேன். அத்தனை கட்டுரைகளும் துறைசார்ந்த வல்லுநர்கள் எழுதும் கருத்துக்கருவூலம் என்பதும் நம் தமிழ் மண்சார்ந்த,பண்பாடு சார்ந்த,கலை சார்ந்த,அருமையான நூல்கள் சார்ந்த, கல்வி,சுகாதாரம், உடல்நலம், மனநலம் சார்ந்த, தன்னம்பிக்கை சார்ந்த கட்டுரைகள் தினம்தினம் என் பார்வைக் கட்டுரைகளாக வந்துகொண்டிருப்பதைக் கண்டேன். 

நல்ல கருத்தியலை தினமலர் நாளிதழ் முன் வைக்க அரைப் பக்கத்தை ஒதுக்கும்போது நாம் ஏன் எழுதக்கூடாது? என்ற எண்ணம் தோன்றியது. பல நூல்களைப் படித்த ஒரு மனநிறைவை அந்தப்பக்கம் தந்துகொண்டிருக்கிறது.

 காரிருளைப் பழிப்பதைவிட நாம் ஏன் அகல்விளக்காய் அமையமுயற்சிக்கக் கூடாது என்று தோன்றியது. சல்லடை போல் நல்லதைவிட்டுவிடாமல் முறம் போல் தூசுதும்புகளை நீக்கி நல்லனவற்றையே வைத்திருப்பவர்களும் இருக்கும்போது, நாம் நம்பிக்கைக் கட்டுரைகளை, வாழ்வியல் கட்டுரைகளை,ஒப்பற்ற தலைவர்களின் உயரிய வாழ்வியலை எழுதலாமே என்று முடிவெடுத்தேன். 

என் கட்டுரை என் பார்வையில் வெளியாகும் அன்று அதிகாலையிலேயே படித்துவிட்டு லண்டனில் இருந்தும் பங்களாதேசிலிருந்தும்,மலேசியாவிலிருந்தும், மதுரை, காரைக்குடி,கொடைக்கானல்,தேனி,ஸ்ரீவில்லிபுத்தூர்,சிவகாசி என்று தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வரிக்கு வரி வாசித்து என்னைச்  செல்பேசியில் பாராட்டும் அருமையான வாசகர்களை நான் என் வாழ்வில் கண்டது பேரானந்த அனுபவம்.

 வழக்கறிஞர்கள் பேராசிரியர்கள், இல்லத்தரசிகள், வணிகம் செய்பவர்கள், அன்றாடம் உழைத்து வாழும் தொழிலாளர்கள் வாழ்த்துகளைத் தந்து பாராட்டுவோரின்  அன்பால் என் கட்டுரை வெளிவரும் நாள் மிகநிறைவான  நாளாகவே இன்றும் அமைகிறது. 

கட்டுரைக்குக் கீழே செல்பேசி எண்ணையும் தந்துவிடுவதால் உடனுக்குடன் என் எழுத்து குறித்த பலதரப்பட்ட விமர்சனத்தை என்னால் அறிந்து கொள்ளமுடிந்தது. ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாட்டிற்காக மலேசியா சென்றபோது தினமலர் அறிமுகத்தில் நண்பர்கள் பலரையும் சந்த்தித்தேன்.

 நல்லவற்றை அழகாக நயமாக நாம் சொல்லும் விதத்தில் சொல்லவேண்டிய ஊடகத்தில் சொன்னால் உறுதியாக பலன் விளையும் என்பதை என் பார்வை இன்றும் வெற்றிதீபமாக விளக்கிக்கொண்டே இருக்கிறது. 

2014 ஆம் ஆண்டின் இறுதிநாள் கல்லூரியில் இருந்தபோது தினமலர் அதிபர் முனைவர் ராமசுப்பு அவர்கள் செல்பேசியில் பேசினார்கள். இதழியல் துறையில் சாதனை படைத்து முனைவர் பட்டம் பெற்றுவருமான முனைவர் ராமசுப்பு அவர்கள் செல்பேசியில் பேசினார்கள். 

புத்தாண்டில் மலர்வோம் புதுமனிதராய் என்கிற என் கட்டுரையைப் படித்துவிட்டு வரிக்குவரி பாரட்டினார்கள்.

 புத்தாண்டு அன்றுதானே வரும் என்று நினைத்துக் கொண்டிருத்தபோது முந்தைய நாளே வெளியிட்டுவிட்டீர்களே என்று கேட்டேன். சிரித்துக்கொண்டே அவர்  சொன்னார் நாளை நம் முன்னாள் சனாதிபதியின் கட்டுரை வெளியாகிறது என்றார், மறுநாள் என் பார்வையில் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் கட்டுரை வெளிவந்தது.

 சனாதிபதியாய் இருந்தவரின் கட்டுரை வருவதற்கு முந்திய நாள் அதே என் பார்வையில் என் கட்டுரை வந்தது என் பேறு. அதுமட்டுமல்லாமல் என் பார்வையை டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தொடர்ந்து வாசித்து வருகிறார் என்ற செய்தியும் எனக்கு இன்னும் கவனமாகவும் தரமாகவும் எழுதவேண்டும் என்றும் நினைக்கத்தூண்டியது. 

தன்னம்பிகைக் கட்டுரைகள் இளையோரிடம் பெரும்வரவேற்பைப் பெற்றது.அனைத்து வாசகர்களும் உடன் நூலக மாற்றுங்கள் என்று சொல்லிக் கொண்டே இருகின்றனர்.

பாரதப் பிரதமரிடம் சிறந்த கட்டுரையாளருக்கான சத்பவனா தேசியவிருதை நான் கல்லூரியில் படித்த காலத்தில் பெற்றிருக்கிறேன்..

ஆனால் அதைவிட உயர்ந்த விருது ,என் பார்வை கட்டுரை மிக நன்றாக வந்திருக்கிறது  என்று சொல்லும் முகம்தெரியாத வாசகரின் நல்வாழ்த்து.பாரதியில் தொடங்கிய என் பார்வை பயணம் எம்.எஸ்.சுப்புலட்சுமி நூற்றாண்டுக் கட்டுரையாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.






















தொடர்ந்து அன்பால் அனைவரையும் தன்பால் ஈர்த்துக்கொண்டிருக்கும் ஆசிரியர் திரு.ஜி.வி.ரமேஷ்குமார் அவர்களுக்கும் அதிபர் முனைவர் ராமசுப்பு அவர்களுக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.
 
                                       அன்புடன்
                                      சௌந்தர மகாதேவன்

Sunday, March 22, 2015

குறையொன்றுமில்லை..”- சிரமம் தாண்டிய சிகரங்கள்..




பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன்,
தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி),
திருநெல்வேலி
9952140275

காலம் அவிழ்த்துப் போடும் புதிர் விந்தையாகத்தான் இருக்கிறது. கண் வலிக்காரர்களைக் கண்டவுடன் ஒதுங்குகிற நாம் அவநம்பிக்கைக்காரர்களை அருகில் வைத்திருக்கிறோம்.

அவநம்பிக்கையைப் புறந்தள்ளி நம்பிக்கையின் அடையாளமாய் திகழும் சிரமம் தாண்டிய சிகரங்கள் சிலரை இந்த நாளில் நினைப்பது இனிமையானது.

 அனைத்து உறுப்புகளும் பெற்றிருந்தும் மனவலிமையில்லாதவர்களுக்கு மத்தியில் ஓரிரு புலன்கள் அதன் பணியைச் செய்யாவிட்டாலும்கூட மனஉறுதியோடு மாற்றுத்திறனை வளர்த்துக்கொண்டு சாதனையாளர்களாய் தடம்பதித்து வரலாற்றில் இடம்பிடித்த மாற்றுத்திறனாளிகள் மகத்தான சாதனையாளர்கள்; பிரியத்தைப் பிரியமாகப் புரியவைப்பதில்தான் வாழ்க்கை வாழ்கிறது.வாழ்வில் பிரியம் வைத்து தடைகளை உடைத்தெறிந்தவர்களின் வாழ்க்கை நமக்கு நம்பிக்கை தருகிறது.

இலக்கியம் படைத்த இரட்டைப் புலவர்கள்
..............................................................................................
எண்ணம் கிண்ணம் போன்றது, ஊற்றியதை ஏற்றுக்கொள்ளும் அப்படியே! தன் வடிவத்தில்.ஒருவர்கண்களால் மற்றவர் பார்த்து,ஒருவர் கால்களால் மற்றவர் நடந்த அதிசயம் நடந்தது அவ்விருவர் வாழ்விலே.. சோழ நாட்டில் பிறந்த இளஞ்சூரியர்,முதுசூரியர் எனும் இருபுலவர்கள் தில்லைக் கலம்பகம் உள்ளிட்ட அரிய இலக்கியங்கள் படைத்த சாதனையாளர்கள்..நினைத்தவுடன் கவிபாடும் ஆற்றல் மிக்கவர்கள்.

இவர்களில் ஒரு புலவருக்குப் பார்வைத்திறன் கிடையாது,மற்றொரு புலவருக்கு நடக்க இயலாது.நடக்கஇயலாத புலவரைக் கண்பார்வைத்திறனற்ற புலவர் தூக்கித்தன் தோள்களில் வைத்து மேலே அமர்ந்தவர் பார்த்துச் சொல்லும் திசையில் நடப்பாராம்.இருபுலவர்களும் கலம்பகம் பாடுவதில் வல்லவர்கள்.நடக்கஇயலாதவர் செய்யுளின் முதலிரு அடிகளைப் பாட கண்பார்வையற்றவர் அவர் பாடியதைக் கேட்டு சரியாக அச்செய்யுளைப் பாடிமுடிப்பாராம்.ஒருவர் புலன்களை மற்றவர் பயன்படுத்தி இறவா இலக்கியங்களைப் படைத்தது சாதனைதானே.

இசைமேதை பீதோவன்
.....................................................
உலகின் மிகப்பிரபலமான இசைமேதையாகத் திகழ்ந்த பீதோவன்,மிகக் கடினமான சிம்பனியில் பாடலையும் சேர்த்து ‘கோரல் சிம்பனியை’ உருவாக்கி லட்சக்கணக்கான இசைரசிகர்களின் காதுகளைக் கவுரவப்படுத்தியபோது அவர்களின் கைதட்டலைக்கூடக் கேட்கத் திறனற்றவராக மாறியிருந்தார்.

குடித்துவிட்டு அடித்துத் துன்புறுத்திய தந்தை,கண்ணெதிரே இறந்துபோன சகோதர்களின் இறப்பு,குடும்பத்தின்  கடன்சுமை,காதல் தோல்வி போன்ற எதிர்மறையான நிகழ்வுகள் பீதோவனை மூர்க்கத்தனமான மனிதராய் மாற்றின.நிம்மதிதேடி அவர் விரும்பிச்செய்த செயல்கள் அவர் உடல்நலத்தைக் கெடுத்துக் காதுகளின் கேட்கும்திறனைக் கெடுத்தன.உலகமே போற்றிய சிம்பனி இசைக்கோர்வையை உருவாக்கியவரே அதைக் கேட்கமுடியாவிட்டாலும் உலகம் இன்றும் பீதோவனைப் போற்றுகிறது மகத்தான மாற்றுத்திறன் கொண்ட இசைமேதையாக.

குமரகுருபர சுவாமிகள்
....................................................
ஐந்துவயது வரை வாய்பேசா சிறுவராக திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஊரில் வாழ்ந்து, திருச்செந்தூர் திருமுருகன் திருவருளால் பேசும்திறன் பெற்று கந்தர்கலி வெண்பா,கயிலைக் கலம்பகம்,மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ்,நீதிநெறி விளக்கம்,முத்துகுமாரசாமி பிள்ளைத்தமிழ்,சகலகலாவல்லிமாலை போன்ற பதினைந்து நூல்களைத் தந்த குமரகுருபர சுவாமிகள் ஒப்பற்ற சாதனையாளர்.

“மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரா ரவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணா யினார்
 
சாதனையாளராய் மலரவேண்டுமானால் உடல்வருத்தம் பாராமல்,பசியைக்கூட நினைத்துப் பார்க்காமல், தூங்காமல்,தனக்கு யார் எந்தத் தீமை செய்தாலும் அதைப்பற்றி எதுவும் எண்ணாமல்,பாராட்டியோ விமர்சித்தோ சொல்லப்படும் செய்திகளைப் பெரிதாய் கருதாமல் தன்பாதையில் துணிவுடன் பயணிக்கவேண்டும் என்ற அருமையான பாடலை ‘நீதிநெறி விளக்கம்’ நூலில் தந்த ஒப்பற்ற சாதனையாளர் குமரகுருபர சுவாமிகள்.

தாமஸ் ஆல்வா எடிசன்
......................................................
மூளைவளர்ச்சிக் குறைந்தவரென்றும்,காதுகேட்கும் திறனற்றவரென்றும் பள்ளியில் ஆசிரியர்களால் குறைசொல்லப்பட்ட  தாமஸ் ஆல்வா எடிசன் சிறுவன்,ஏழுவயதில் ஏற்பட்ட உள்ளெழுச்சியால் 1093 பொருட்களைக் கண்டறிந்து உலகம் போற்றும் மகத்தான அறிவியல் மேதையாக மாறியது விடாமுயற்சியாலும் தொடர்பயிற்சியாலும்தான்.எட்டரை வயதில் பள்ளிக்குச் சென்றவரை ஆசிரியரின் சுடுசொற்கள் பள்ளிப்படிப்பை நிறுத்துமளவு கடுமையாய் பாதித்தது.

வீட்டில் தன் தாயாரிடம் கற்றகல்வி புதுமையான கண்டுபிடிப்புகளில் நாட்டம் கொள்ளுமளவிற்கு தன்னம்பிக்கை உடையவராய் மாற்றியது.நீயூட்டனும்,பாரடேயும் சிறுவயதில் அவரை நூல்கள் மூலம் வந்தடைந்தார்கள்.ரயில் நிலையத்தில் செய்தித்தாள்போட்டு சம்பாதித்த பணத்தை ஆய்வுப் பயன்படுத்தினார்.தானாக இயங்கும் தந்திப்பதிவுக்கருவி,கிராமபோன்,மின்விளக்கு, போன்ற சாதனங்களைக் கண்டறிந்தார்.மூளைவளர்ச்சிக் குறைந்தவரென்றும் செவித்திறன் குறைந்தவரென்றும் இகழப்பட்ட தாமஸ் ஆல்வா எடிசன் 84 வயதில் காலமானபோது உலகநாடுகள் மின்விளக்கை அணைத்து அவருக்கு அஞ்சலி செலுத்தின.

சாதனைப் பெண்மணி ஹெலன் ஹெல்லர்
.................................................................................................
எல்லாக் குழந்தைகளையும் போல் நன்றாகத்தான் பிறந்தது,ஒன்றரை வயது வரை எல்லாக் குழந்தைகளையும் போல் நன்றாக வளரத் தொடங்கியது.திடீரென்று ஒரு நாள் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வாய் பேசமுடியாது,காதுகேட்கும் திறன் இல்லாமல் போனது.வளரவளரத் தன் தேவைகளைக் கூட அடுத்தவர்களிடம் தெரிவிக்கச் சிரமப்பட்டது.

எல்லாக் கதவுகளும் மூடப்பட்ட நிலையில் அந்தக் குட்டிதேவதை மீது அன்பைச் செலுத்த ஆசிரியர் வடிவில் ஆன் சல்லிவன் வந்தார்.சிறப்புக்கல்வியை அந்தக் குழந்தைக்குப் பொறுமையாய் தந்தார்.இடதுகையில் பொம்மையைத் தந்து வலதுகையில் ஆட்காட்டிவிரலால் “பொம்மை” என்று எழுதினார்.உச்சரிக்கும்போது உதட்டில் விரலை வைத்து உச்சரிப்பின் அதிர்வை உணரவைத்தார்.பேச்சுப்பயற்சி தந்தார். 

ஆன் சல்லிவனின் விடாமுயற்ச்சியால் அந்தக் குழந்தை வளர்ந்து ஹெலன் ஹெல்லர் என்ற பெயரில் எல்லா மேடைகளிலும் பேசினார்.செவித்திறன் குறைந்த ஆயிரக்கணக்கான குழந்தைகளைச் சாதனையாளராய் உருவாக்கினார்.

எவரெஸ்ட் சிகரம்தொட்ட அருணிமா சின்ஹா
.......................................................................................................
 “சிகரத்தை அடைய எங்கிருந்து பயணத்தைத்தொடங்கவேண்டும்?” என்று தன் குருவிடம் கேட்டான் சீடன்,உடன் அவர்,” சிகரத்தை அடையவேண்டுமானால் சிகரத்தின் உச்சியிலிருந்து தொடங்கவேண்டும் என்றார் குரு.அது எப்படி குருவே ? என்றான் சீடன்.”சீடனே! நீ எப்போது சிகரத்தை அடையவேண்டும் என்று நினைத்துவிட்டாயோ அப்போதே உன் மனம் சிகரத்தை அடைந்துவிட்டது.ஏறிநடந்து நீ இரண்டாம் முறையாய் சிகரம் தொடுகிறாய்” என்றாராம்.

தேசிய அளவில் சாதித்த கைப்பந்து வீராங்கனை அருணிமா சின்ஹா,லக்னோவிலிருந்து புதுடெல்லிக்கு தொடர்வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தார்;சற்றும் எதிர்பாராத வகையில் ரயில்கொள்ளையர்கள் வண்டியில் ஏறிப் பயணிகளிடம் நகைகளைக் கொள்ளையடிக்க அவர்களை எதிர்த்து வீரத்துடன்போராட அவர்கள் அருணிமாவை ஓடும்வண்டியிலிருந்து வெளியே வீச அடுத்த தன்டவாளத்தில்  சென்றுகொண்ருந்த ரயில் வண்டியில் சிக்கித் தன் ஒருகாலை இழந்தார்.ஆனாலும் மனம்தளராமல் மூச்சுப்பிடித்து முன்னேறி 25 வயதில் ஒற்றைக்காலில் எவரெஸ்ட் சிகரத்தை எட்டினார் உத்தரப்பிரதேசத்தின் இலட்சியப் பெண்மணி அருணிமா சின்ஹா. ஆம்! காலை இழந்தாலும் அவர் நம்பிக்’கை’யை இழக்கவில்லை.


ஆணியில் தொங்கும் அப்பாவின் சட்டை அவரை அப்படியே ஞாபகப்படுத்துவதைப் போல் நம்பிக்கை எனும் ஒற்றைச்சொல் நம்மை செயற்கரிய செயல்கள் செய்ய அழைத்துச் செல்கிறது. நீரெழுச்சியைப் போல் பேரெழுச்சியோடு பயணப்படவேண்டிய நேரத்தில்; தயக்கத்தைத் தள்ளி நிறுத்துவோம்.எதுவும் குறையில்லை..எதை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காமல் விட்டு விடுதலையாகிப் பறப்போம் சிட்டுக் குருவிகளாய் ...விரிவானம் வெளியே காத்திருக்கிறது.
*
கட்டுரையாளர் பாரதப்பிரதமரிடம் தேசியவிருது பெற்றவர்.